சிலுவையில் அறையப்பட்டு மரணித்த இயேசுபிரான் உயிர்த்த தினம் இன்றாகும்.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு விசேட ஆராதனையும் இயேசுபிரானின் உயிர்ப்பு ஆராதனையும் சிறப்பாக நடைபெற்றது.
கிழக்கு மாகாணத்தின் பிரதான நிகழ்வு நேற்று நள்ளிரவு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு-அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இந்த உயிர்ப்பு விசேட ஆராதனை நடைபெற்றது.
பாவத்தின் இருள் உறங்கிக்கிடக்காமல் உயிர்ப்பின் ஒளி புத்துணர்வு பெற பாஸ்கா திருவழிபாடு நடாத்தப்பட்டது.
இதன்போது நான்கு பாகங்களாக வழிபாடுகள் நடைபெற்றன.
திரு ஒளி வழிபாடு, இறைவாக்கு வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு, நற்கருணை வழிபாடு என்ற ரீதியில் நடைபெற்றது.
இயேசுவின் உயிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஒளியேற்றப்பட்டதுடன் நீர் தூய்மைப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்டு அடியார்களுக்கு தெளிக்கப்பட்டது.
இதன்போது விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் இந்த வழிபாடுகளில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.தேவதாசன் அடிகளாரும் கலந்து சிறப்பித்தார்.