மட்டக்களப்பு, ஏறாவூர் நகரப் பகுதியில் இரண்டரை மாத சிசு, தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்திருப்பதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.
ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த பெண் சிசு ஒன்றே இவ்வாறு மரணித்துள்ளது.
சனிக்கிழமை இரவு (15.04.2017) 10.30 மணியளவில் சிசுவுக்கு தாய் பாலூட்டியதன் பின்னர் தாயும் சேயும் தூக்கத்தில் இருந்துள்ளனர்.
நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்தி தாய் தூக்கம் கலைந்து கண் விழித்து சிசுவைப் பார்த்ததும் சிசு அசைவற்றுக் காணப்பட்டுள்ளது.
உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும், சிசு ஏற்கெனவே இறந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
உடற் கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

