அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த நான்கு வருடங்களில் 2632 மில்லியன் ரூபா (8.52 மில். அமெரிக்க டொலர்) வருமானம் நாட்டுக்கு கிடைத்திருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அலங்கார மீன் வளர்ப்புத் துறையை அபிவிருத்தி செய்வதற்காக கடற்றொழில் அமைச்சினால் பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இலங்கை நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் தாய் மீன்கள் வழங்கப்படுகின்றன.
பயிற்சி மற்றும் வர்த்தக பொருட்காட்சிகள் ஏற்பாடு செய்து அவர்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப அறிவு வழங்கப்படுகிறது. மீன் உணவு விநியோகிக்கப்படுகிறது.
மாணவர்கள் மத்தியில் அலங்கார மீன் வளர்ப்பை ஊக்குவிப்பதற்காக பாடசாலைகளில் அலங்கார மீன் வளர்ப்பு சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அபாயகர மீன்கள் இறக்குமதி செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்ட ரீதியாக அலங்கார மீன் வளர்ப்பு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

