மட்டக்களப்பு துப்பாக்கிச் சூடு – 4 பெண்கள் படுகாயம்

218 0

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் காஞ்சரம்குடா பனையறுப்பான் பிரதேசத்தில் நேற்று (12) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 4 பெண்கள் படுகாயமடைந்த நிலையியல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் துப்பாக்கிச் சூடு நடாத்தியவரை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் இரு குடும்பங்களுக்கு இடையே இடம்பெற்ற முறுகல் நிலையை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்ய ஒருவர் முயற்சித்துள்ளார்.

இதற்காக மோட்டார் சைக்கிளை வீட்டில் இருந்து வாசலுக்கு எடுத்து வந்தபோது அவர் மீது உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் சுட்ட போது மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியில் பட்டு வெடித்து சிதறியது. இதன்போது. அருகே இருந்த கந்தப்போடி குமுதினி (33), கந்தப்போடி சுசிகலா (19). சதாசிவம் கவிதா (26), ரவீந்திரராசா சுபேதினி (31) 4 பெண்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் துப்பாக்கிச் சூடு நடாத்திய நபரை கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.