ஜப்பானும் ஐ.நா. பெண்கள் அமைப்பும் இணைந்து இலங்கையில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்த நடவடிக்கை

16 0

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மோதல்களை தடுப்பதில் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் மற்றும் அவர்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஜப்பான் அரசாங்கமும் ஐ.நா. பெண்கள் அமைப்பும் “சமாதானத்துக்கான பாதைகள்” என்ற செயற்றிட்டத்தை ஆரம்பித்தனர்.

2018ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு தனது பங்காளர் நாடாக ஜப்பான் அரசாங்கம் உதவி செய்துவரும் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு (WPS) தொடர்பான தேசிய செயற்றிட்டத்தை (NAP) அமுல்படுத்துவதற்கு ஆதரவளிப்பதே இந்த செயற்றிட்டத்தின் நோக்காகும்.

பெப்ரவரி 2023இல், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 1325 (2000)இன் கீழான அதனது சர்வதேச கடப்பாடுகளுக்கிணங்க, இலங்கை WPS தொடர்பான தனது முதலாவது NAPஐ ஏற்றுக்கொண்டது. இந்த திட்டத்தின் விருத்தியானது ஐ.நா பெண்கள் அமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடனும் ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடனும் இலங்கையின் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டது.

திட்டத்தை வெற்றிகரமாக ஏற்றுக்கொண்டதன் மூலம் அதன் முன்னுரிமைப் பகுதிகளை செயற்படுத்துவதன் மூலம் சமாதானத்துக்கான வலுவான பாதைகளை உருவாக்குவதை இந்த செயற்றிட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் 500 பெண்களுக்கு இயலளவை கட்டியெழுப்பும் ஆதரவை வழங்குதல், பால்நிலை சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக சமூக மற்றும் வீட்டு மட்டத்தில் சமூக நெறிமுறைகள் மற்றும் நடத்தை மாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றுடன் அவர்களுக்கு முரண்பாட்டுத் தீர்வு, மத்தியஸ்தம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்ப வழிநடத்துவதற்கு அவர்களை சாதகமாக்கல் ஆகியவை உள்ளடங்கும்.

இந்த செயற்றிட்டம், முன்னாள் மோதல்கள் பாதித்த பகுதிகளில் உள்ள 500 பெண்கள் தலைமையிலான நுண்கைத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதோடு, நாட்டின் சமூக-பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் இயலாமையுடைய பெண்கள் உட்பட பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு ஆதரவை வழங்கும்.

“இலங்கையில் பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் ஐ.நா பெண்கள் அமைப்பின் நீண்டகால பங்காளராக ஜப்பான் இருந்து வருகிறது. எமது நிகழ்ச்சித் திட்டங்கள் பெண்களின் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளதுடன், இலங்கைப் பெண்களை மாற்றத்தின் தலைவர்களாக ஆக்குவதற்கு இந்த கூட்டுறவைத் தொடர நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என ஐ.நா பெண்கள் அமைப்பின் இலங்கையின் அலுவலகத் தலைவரான ராமாயா சல்காடோ தெரிவித்தார்.

இந்த செயற்றிட்டமானது அனுராதபுரம், மட்டக்களப்பு, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.