போதைப்பொருள் சம்பவம் – கைது செய்யப்பட்ட சிறுமியை மீட்க கையூட்டல் வழங்க முற்பட்ட பெண் கைது

244 0

போதைப்பொருள் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமி மற்றும் சந்தேகத்துக்குரிய ஒருவரை மீட்பதற்காக கையூட்டல் வழங்க முற்பட்ட பெண் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை சப்புகஸ்கந்த காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

சப்புகஸ்கந்த காவற்துறையின் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரிக்கே அவர் கையூட்டல் வழங்க முற்பட்டுள்ளார்.

மாகொல தேவாலய வீதியில், 100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த வர்த்தகத்துடன் மேலும் இரண்டு பேருக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்தது.

இதற்கமைய குறித்த போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர் மற்றும் 15 வயதுடைய சிறுமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, காவற்துறை நிலையத்திற்கு பிரவேசித்த போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவரின் சகோதரியான பெண் சந்தேகத்துக்குரியவர் 5 லட்சம் ரூபாவை கையூட்டலாக வழங்குவதாகவும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறும் காவற்துறையிடம் கோரியுள்ளார்.

உடனடியாக இரண்டரை லட்சம் ரூபாவினை வழங்கவும் அவர் முற்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.