பொன்னாவெளியில் குடியேற விரும்பினால் வீட்டுத்திட்டம் வழங்கத் தயார் – டக்ளஸ்

17 0

பூநகரி பொன்னாவெளிப் பகுதியில் மக்கள் குடியேற விரும்பினால் மக்களுக்கான வீட்டுத்திட்டகளை வழங்கத் தயார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (11) யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் பொன்னியில் மக்களுக்கான அபிவிருத்திகளை முன்னெடுக்கும் நோக்கில் சுண்ணக்கல் அகழ்வு ஆய்வுப் பணிக்காக  இரண்டு துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்துச் சென்றேன் போதையில் நின்றவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி செல்ல விடாமல் தடுத்தனர்.

நான் அங்கு சென்றது துறைசார்ந்த அதிகாரிகளிடம் மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக சென்றிருந்தேன் சிலர் அதனை அரசியல் நோக்கத்திற்காக தடுத்து விட்டார்கள்.

பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மக்களுக்கு சாதகமானது என கருதினால் மட்டுமே அகழ்வு பணி மேற்கொள்ளப்படும்.

சிலர் ஒரு ஊடக சந்திப்பில் பொன்னாவெளியில் இருந்த மக்களை வீட்டு திட்டம் தர முடியாது வெளியிடங்களுக்கு வந்தால் மட்டுமே பெற முடியும் என கூறியதாக தெரிவித்தனர்.

நான் அவர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன் பொன்னாவெளியில் மக்கள் வசிக்கப் போகிறார்கள் என்றால் அவர்களுக்கான வீட்டு திட்டத்தை வழங்க தயாராக இருக்கிறேன்.

மக்களின் வாழ்வாதாரம் நாட்டின் அபிவிருத்தி, இந்த அபிவிருத்தியை அரசியல் நோக்கங்களுக்காக மதுபானங்களை வழங்கி தடுக்க முடியாது.

ஆகவே பொன்னாவெளி சுண்ணக்கல் அகழ்வுக்கான ஆய்வுப் பணி உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதோடு அப் பகுதியில் மக்கள் குடியேற விரும்பினால் அவர்களுக்கான வீட்டுத் திட்டத்தை வழங்க தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.