மோடியின் இலங்கை விஜயத்தில் மீனவர்களின் படகுகளுக்கு விடுதலை

238 0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியும் என இந்திய ராஜ்ய சபை உறுப்பினர் எல்.கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்று இதனை தெரிவித்துள்ளது.இலங்கையில் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச வெசாக் பண்டிகையில் இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அவர், மே மாதம் 11ஆம் திகதி இலங்கை வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய ராஜ்ய சபை உறுப்பினர் எல்.கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களின் 140 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படும் என எல்.கணேசன் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு உறவை கருத்திற்கொண்டு இந்திய பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்னர், தடுப்பிலுள்ள படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.