புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்க ஏற்பாடு!

277 0

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான மற்றொரு வரைவு சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள, பயங்கரவாத திருத்தச்சட்டத்தின் வரைவு ஒன்று ஏற்கனவே சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்த வரைவில் பல முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.அண்மையில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது, பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகவும், புதிதாக கொண்டு வர உத்தேசிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தொடர்பாகவும், மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்திருந்தன.இதையடுத்தே, திருத்தங்கள் செய்யப்பட்ட மற்றொரு வரைவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.