பாராளுமன்றத் தேர்தல் பிற்போடப்படமாட்டாது

91 0

பாராளுமன்றத் தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இரண்டு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அதன்காரணமாக தேர்தல்கள் பிற்போடப்படுமென எதிரணியினர் கற்பனையில் பிரசாரம் செய்வதாகவும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் பாராளுமன்ற தேர்தல் முறைமையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக கரிசனைகள் கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அனைத்து இனக்குழுமங்களினதும் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்யும் வகையிலான முறைமையொன்று அமுல்படுத்தப்பட வேண்டியமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலைமைகளைக் கருத்திற்கொண்டே என்னால் பாராளுமன்றத் தேர்தல் முறைமையை மாற்றம் செய்வது தொடர்பாக இரண்டு முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 160 பேர் குறித்த தேர்தல் தொகுதிகளிலுள்ள வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதோடு எஞ்சிய 65 பாராளுமன்ற உறுப்பினர்களை விகிதாசார தேர்தல் முறை மூலம் தேசிய ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் தேர்ந்தெடுப்பதற்கு அமைச்சரவையில் என்னால் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவதாக ‘செனட்’ சபையொன்றை அமைப்பது தொடர்பில் முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செனட் சபையானது ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான அங்கத்துவத்தினையும், புத்திஜீவிகளின் அங்கத்துவத்தினையும் கொண்டதாக அமையவுள்ளது.

இந்தியா, பிரித்தானியா, உள்ளிட்ட நாடுகளில் செனட் சபை கணப்படுகின்றது. அந்த வகையில் இந்த செனட்சபையானது, பாராளுமன்றத்தினை கண்காணிக்கும் செயற்பாட்டையும், அரசிலமைப்பு சபையின் செயற்பாட்டையும் முன்னெடுக்கும் வகையில் தொழிற்படுவதற்கான முன்மொழிவுகள் செய்யப்படவுள்ளது.

அத்துடன் இந்த முறைமையை மாற்றம் சம்பந்தமாக அனைத்து அரசியல் கட்சிகளுடனும், சிவில் அமைப்புகளுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதோடு அவர்களின் முன்மொழிவுகளைப் பெறுவதற்கான பிரதமர் தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தேர்தல்முறைமை மாற்றமானது அடுத்துவருகின்ற பாராளுமன்றத் தேர்தலை மையப்படுத்தியதல்ல. அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குள் அதனைச் செயற்படுவதற்கு சாத்தியமற்ற நிலைமைகளே அதிகமுள்ளன.

காரணம், எல்லைமீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டியதோடு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறவேண்டும். அதற்காக அனைத்து பாராளுமன்ற அங்கத்தவர்களும் ஒருங்கிணைத்து அங்கீகரிக்க வேண்டும். ஆகவே அதற்கடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குள் தான் இந்த முறைமையை நடைமுறைக்கு கொண்டுவருவது சாத்தியமாகின்றது.

இவ்வாறான நிலையில், தேர்தல் முறைமை மாற்றத்தின் காரணமாக, பாராளுமன்றத் தேர்தல் பிற்போடப்படும் என்று எதிரணியினர் தற்போது பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இதுவொரு யதார்த்தமற்ற கற்பனைக் கதையாகும் என்றார்.