போராட்டத்தின் போது நாடு அராஜக நிலைக்கு செல்வதை தடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன துணிவுடன் தீர்மானங்களை மேற்கொண்டார்.
அதனால் அவரின் அர்ப்பணிப்புக்கு நன்றி செலுத்தும் வகையில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு வெளிநாட்டு விஜயத்தையும் கைவிட்டு நாடு திரும்பினேன் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் சிறந்த பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற முறைமை மிக மோசமான நெருக்கடிக்கு உள்ளாகும் நிலையில் அதற்காக நாம் பங்களிப்பு வழங்குவதா என நான் கேட்க விரும்புகிறேன்.
1980 ஆம் ஆண்டு நான் இந்த பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வரும்போது இங்கு இருந்த நிலைமை முற்றிலும் வித்தியாசமானது. அந்த காலம் தொடர்பில் புரிதல் இல்லாத சிலர் இக்காலம் தான் மிக மோசமானது எனக்கூறுவர். பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள் அனைவரும் திருட்டுப் பாராளுமன்றம் என்றும் அதற்கு எதிராக போராட்டம் செய்ய வேண்டும் என்றும் கூறிய காலம் அது.
சபாநாயகருக்கு எதிரான குற்றச்சாட்டை முறையாக முன் வைக்காமல் வன்முறையற்ற ஜனநாயக நாடாக இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும். தற்போதைய சபாநாயகரை போன்று எதிர்க்கட்சியினருக்கு சந்தர்ப்பம் வழங்கிய வேறு சபாநாயகர்கள் வரலாற்றில் கிடையாது
அத்துடன் போராட்டத்தின் போது நாடு அராஜக நிலைக்கு செல்வதை தடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன துணிவுடன் மேற்கொண்ட செயற்பாடுகள் நன்றியுடன் நினைவு கூரத்தக்கது. அதனால்
அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சர்வதேச நிதி மாநாட்டுக்காக வெளிநாட்டுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தநான், அந்த மாநாடு நிறைவு பெறாத நிலையில் இடை நடுவில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்காக நாடு திரும்பினேன் என்றார்.