அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேர வருமான வரித்துறை சோதனை நிறைவுற்றது

245 0

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை முதல் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவுற்றது.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அதிகமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் 22 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவுற்றதை தொடர்ந்து விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது.

சோதனையின் போது வருமானவரி அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினேன். என் வீடு மற்றும் எனது சகோதரர் வீட்டில் இருந்து எவ்வித பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை. சொந்த ஊர் மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ஏதும் சிக்கவில்லை.

என் வீட்டிலும், சரத்குமார் வீட்டிலும் அரசியல் ஆதாயத்திற்காக சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.