ஜனாதிபதி தலைமையில் ஐ.தே.க யின் முதலாவது பிரசாரக் கூட்டம்

92 0

நிஜம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் ஐக்கிய தேசிய கட்சியின் முதலாவது பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (10) குருணாகல், குளியாப்பிட்டிய நகரசபை மைதானத்தில் பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் பங்கேற்கவுள்ள முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் இதுவாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதுவரையிலும் கட்சி சார்பற்ற அரச தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

எவ்வாறிருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்காக இந்த மக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.

கட்சி சார்பற்ற வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்காக இனிவரும் காலங்களில் வெவ்வேறு தரப்பினரால் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இறுதியில் இவ்வனைத்து தரப்பினரும் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வோம் என்றும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டியவில் இடம்பெறவுள்ள ‘நிஜம்’ என்ற தொனிப்பொருளிலான மக்கள் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, கொழும்பு மாவட்ட தலைவர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுனர் நவீன் திஸாநாயக்க ஆகியோர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.