ஏனைய மூவரையும் விடுவியுங்கள் ; இந்திய அரசை கோரும் ஜனநாயக போராளிகள் கட்சி

27 0

முருகன், றொபேட்டயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து தாயகம் திரும்ப ஆவண செய்ய வேண்டும் என இந்திய மத்திய மானில அரசுகளை எமது மக்களின் சார்பில் கேட்டுகொள்வதாக ஜனநாயகபோராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தசாப்தங்கள் கடந்தும் ஈழத்தமிழர்களது நியாயங்களையும்  அறைகூவல்களையும் இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என தமிழினம் கருதுகிறது.

ஈழத்தமிழர்களதும் இந்தியாவினதும் சமூக அரசியல் பொருளாதார பாதுகாப்பு உறவுநிலைகள் பன்னெடுங்கால வரலாற்றுக்கு உரியவை.

அந்த உரித்தின் அடிப்படையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவானது.

இந்தியா தனது பிராந்தியத்தின் நலன் மற்றும் ஈழத்தமிழினத்தின் பாதுகாப்பு அரசியல் உரிமை என்பவற்றை கருத்தில் கொண்டே தனது முழுமையான  பலத்தின்  திரட்சியின் அடிப்படையில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் இலங்கையில் தனது படைத்தரையிறக்கத்தையும் நிகழ்தியிருந்தது.

அதற்கு பின்னரான சில கசப்பான அசாதாரணமான நிகழ்வுகள் இந்திய ஈழத்தமிழர்களது உறவு நிலைகளில் இடைவெளியினை ஏற்படுத்தி இறுதியில் சிறிபெரும் புத்தூரில் ஏற்படுத்தப்பட்ட துன்பியல் நிகழ்வினை அடுத்து ஈழத்தமிழர்களை இந்தியா முற்றுமுழுதாக கைவிட்டுவிட்டது.

எங்கு எமக்கும் இந்தியாவிற்குமான உறவுநிலை கைவிட்டுபோனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு நிலை தொடங்கப்பட வேண்டும் என நாங்களும் எமது மக்களும் கருதுகிறோம்.

சிறீபெரும்புதூரின் வழக்குகளில் தண்டனைபெற்று இந்திய நீதிமன்றங்களினால் விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களான முருகன், றொபேட்டயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து தாயகம் திரும்ப ஆவண செய்ய வேண்டும் என இந்திய மத்திய மானில அரசுகளை எமது மக்களின் சார்பில் கேட்டுகொள்கிறோம்.