புங்குடுதீவில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டம்

27 0

புங்குடுதீவில் இன்று செவ்வாய்க்கிழமை உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் தீவக சிவில் சமூகம் அமைப்பின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடலட்டைப் பண்ணை எனும் பெயரில் உள்ளூர் மீனவர்களை முற்றாக புறக்கணித்து இலாப நோக்கில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கும் கடலட்டை பண்ணைகள் அமைப்பதற்குரிய அனுமதிகளை கடற்தொழில் அமைச்சு வழங்குவதற்கு எதிராகவும், பாரம்பரிய மீன்பிடி தொழிலை அழிப்பதற்கு எதிராகவும், சட்டவிரோத மண் அகழ்வை உடனடியாக தடுக்கக்கோரியும், அழிக்கப்பட்டு வருகின்ற கால்நடை வளத்தை பாதுகாக்க கோரியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா , சமூக செயற்பாட்டாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி, சட்டத்தரணி க. சுகாஷ், தீவக சிவில் சமூகம் அமைப்பின் பொருளாளர் கருணாகரன் குணாளன், வேலணை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன், ஊர்காவற்துறை பிரதேச சபை உறுப்பினர் கே. ஞானேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்ததோடு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தீவகம் தெற்கு பிரதேச செயலாளருக்கான மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.