சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எடுத்துள்ள தீர்மானம்

147 0

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் மீதான விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு முடிவு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் ஆகியவற்றிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறுகின்றார், நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தினை சான்றுரைப்படுத்தியமை அரசியலமைப்பு முரணானது மற்றும் பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் அரசியலமைப்புச் சபையை கையாண்டமை தவறு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தற்போதைய நிலையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தரப்பினர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளன.

இந்நிலையில், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வது என்பதற்கு அப்பால்ரூபவ் பிரேரணை மீதான முழுமையான விவாதத்தினையும் பிரேரணையின் மீதான வாக்கெடுப்பு முடிவுகளையும் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் மற்றும் பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இதன் மூலமாக இலங்கை பாராளுமன்றத்தில் ஜனநாயக விழுமியங்கள் முழுமையாக மதிக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்துவதே நோக்கமென எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.