ஆளும் பொதுஜன பெரமுன- ஐ.தே.க கூட்டணி உடைகிறது ?

129 0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தலைமையாக கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையிலான கூட்டணி ஆட்சி பெரும் உள்ளக  நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்துவதற்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில்இ அதற்கு எதிரான நிலைப்பாட்டில் பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்துமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.

பாராளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு ஜனாதிபதி உடன்படவில்லை என்றால், அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து பெரும்பான்மையை சவாலுக்கு உட்படுத்தி தேர்தலுக்கு செல்ல  வேண்டும் என்ற தீர்மானத்தை பொதுஜன பெரமுன எடுத்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையிலேயே பஷில் ராஜபக்ஷ நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு வருகின்றார்.

பொதுஜன பெரமுனவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் மற்றும் கட்சியின் எதிர்காலம் என்பவற்றை கருத்தில் கொண்டு முக்கிய தீர்மானங்களை அவர் எடுக்க உள்ளதாக கட்சி தகவல்கள் பஷில் ராஜபக்ஷவின் வருகையை மேற்கோள்காட்டி கூறின.

மறுப்புறம் பஷில் ராஜபக்ஷ அமெரிக்கவில் இருந்த காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷஇ நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோரை தொடர்ந்தும் தொலைப்பேசி ஊடாக தொடர்புக் கொண்டு நாட்டின் அரசியல் நிலைமைகளையும் கட்சியின் செயல்பாடுகளையும் பஷில் ராஜபக்ஷ கருத்தில் கொண்டிருந்தார்.

அதே போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிராமிய மட்டத்தில் உள்ள மக்கள் ஆதரவுகள் குறித்தும் பல்வேறு வகையில் கணிப்புகளை அவர் முன்னெடுத்திருந்தார். இதன் பிரகாரம் 20 வீதம் தொடக்கம் 22வீதம்  வரையிலான மக்கள் ஆதரவு கிராமிய மட்டத்தில் இன்னும் உள்ளதாக பஷில் ராஜபக்ஷவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மக்கள் ஆதரவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூடிய வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவின் அரசியல் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதே பஷில் ராஜபக்ஷவின் ஆலோசனையாக உள்ளது.  மஹிந்த ராஜபக்ஷஇ நாமல் ராஜபக்ஷ மற்றும் சாகர காரியவசம் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பஷில் ராஜபக்ஷ இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதன் போதே பாராளுமன்ற தேர்தல் முதலில் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் குறித்து பேசப்பட்டுள்ளது. அதேபோன்று பொதுஜன பெரமுன எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்று அரசியல் கட்சியுடன் இணைந்து கட்சியின் சின்னத்தை புதுப்பித்துக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்பட கூடாது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி ரணிலுடன் பஷில் ராஜபக்ஷ முன்னெடுக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.