நீதிமன்ற தடுப்புக் கூண்டிற்குள் போதைப்பொருள் பொதியை வீசிய நபருக்கு விளக்கமறியல் !

36 0

கங்கொடவில நீதிவான் நீதிமன்ற தடுப்புக் கூண்டிற்குள் போதைப்பொருள் பொதியொன்றை வீசியதாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டவர் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இவர் வழக்கு ஒன்று தொடர்பில் இன்று வியாழக்கிழமை (22) நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் கங்கொடவில நீதிவான் நீதிமன்ற தடுப்புக் கூண்டிற்குள் பொதியொன்றை வீசியுள்ளார்.

இதனை அவதானித்த நீதவான் குறித்த பொதியை சோதனையிடுமாறு நீதிமன்றத்தில் இருந்த பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பொதியில் இருந்து 900 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை,  நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காகவும் 6 மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.