மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மீது பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  ஒத்திவைப்பு(காணொளி)

290 0

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் மற்றும் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் உட்பட நால்வர் மீது பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகவும், அரச கரும நடவடிக்கைகளுக்கு குந்தகம் அல்லது இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளமுற்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கடந்த மார்ச் மாதம் 07ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த், அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க இணைப்பாளர், தென்னே ஞானானந்த தேரர், சமவுடமைகள் கட்சியின் உறுப்பினர்களான த.கிருபாகரன், டாக்டர் சி.குமாரகே ஆகியோருக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 44 நாட்களாக அமைதியான முறையில் தமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.