மனம் திரும்பி நல்வழியில் வாழ அழைப்பு விடுக்கும் தவக்காலம்

130 0

இயே­சுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகி­யவற்றை நினைவு கூரு­வ­துடன் மனிதன்  பாவத்­தி­லி­ருந்து விடு­தலை பெற்று மனந்­தி­ரும்பி வாழ்­வதை தவக்­காலம் உணர்த்­து­கி­றது. விபூதிப் புத­னுடன் ஆரம்­ப­மாகும்.

தவக்­கா­லத்தின் முதல் நாளான இன்­றைய தினத்­தில் கத்­தோ­லிக்­கர்கள் அனை­வரும்  தேவா­லயம் சென்று திருப்­ப­லியில் கலந்­து­கொள்­வது கட்­டா­ய­ மாகும். கத்­தோ­லிக்கத் திருச்­ச­பையில் இன்­றைய தினத்தில் குரு­வா­னவர் மக்­க­ளு­டைய நெற்­றியில் “மனி­தனே நீ மண்­ணாக இருக்­கின்றாய், மண்­ணுக்கே திரும்­புவாய் மற­வாதே” என்று கூறி சாம்­ப­லினால் சிலுவை அடை­யாளம் வரைந்து மர­ணத்‍தை நினை­வு­ப­டுத்­து­கிறார்.

தவக்­கா­லத்தின் முதல் நாள் விபூதிப் புதன், திரு­நீற்றுப் புதன், சாம்பல் புதன் என்­றெல்லாம் அழைக்­கப்­ப­டு­வ­துண்டு. தவக்­காலமானது நாற்­பது நாட்கள் அனு­ச­ரிக்­கப்­ப­டு­கி­றது.

மன­ மாற்­றத்தின் கால­மா­கிய தவக்­கா­லத்தில், நாம் அறிந்தும் அறி­யா­மலும் செய்த நம்­மு­டைய தவ­று­களை உணர்ந்து திருந்­தவும், நம்மை நாமே அறிந்து நம்மை கட­வுளின் வழியில் கொண்டு செல்­வ­தற்­கா­கவே இந்தப் புனி­த­மான தவக்­காலம் நமக்குத் தரப்­பட்­டுள்­ளது.

தவக்­கா­லத்தின் 40 நாட்­களில் கத்­தோ­லிக்­கர்கள் செபம், தவம், ஒறுத்தல் முயற்­சி­களில் ஈடு­ப­டு­வது கட்­டா­ய­மாகும். மேலும், உண்ணா நோன்பு இருப்­பதும், ஒருசந்தி நாட்­களில் ஒருசந்­தியும் சுத்த போசன நாட்­களில் சுத்த போசனம் அனு­ச­ரிப்­பதும் கட்­டாயம் எனக் கூறப்­ப­டு­கி­றது.

நாற்­பது என்­பது விவி­லி­யத்தில் மிக முக்­கி­ய­மான எண். விடு­தலைப் பயண நூலின் கதா­நா­யகன் மோயீசன் இஸ்ராயேல் மக்­களை எகிப்­தி­லி­ருந்து மீட்டுக் கொண்டு வரும் வழியில், சீனாய் மலையில் மோயீசன் கட­வு­ளோடு இருந்­தது நாற்­பது இரவும், நாற்­பது பகலும் ஆகும். வாக்­க­ளிக்­கப்­பட்ட கானான் நாட்டை நோக்­கிய பய­ணத்தில் அவர்கள் பாலை நிலத்­திலே அலைந்து திரிந்த ஆண்­டுகள் 40 ஆகும். அதேபோல், நோவாவின் காலத்தில் மழை பொழிந்­தது நாற்­பது இரவும், நாற்­பது பகலும் ஆகும்.

இவை அனைத்­துக்கும் மேலாக, பூமியில் உள்ள மக்­களை பாவத்­தி­லி­ருந்து மீட்­ப­தற்­காக மனித அவ­தாரம் எடுத்த இறை­மகன் இயேசு, பாலை­வ­னத்தில் உண்ணா நோன்பு இருந்­தது 40 நாட்கள் ஆகும்.  இதனை அனுஷ்­டிக்கும் முக­மாக, மனி­தர்கள் தங்­களின் பாவங்­களை நினைத்து அதி­லி­ருந்து மீண்டு, நல்­வ­ழிக்குத்  திரும்­பவும் இந்தத் தவக்­காலம் தரப்­பட்­டுள்­ளது. தவக்­காலம் நமது இய­லா­மை­களை, பாவங்­களை, பிழை­களைக் கண்­ட­றியும் காலம். நமது பல­வீ­னங்­களை இறை­வனின் பலத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் காலம்.

இது இயே­சு­வுக்­காக அழும் கால­மல்ல, மாறாக நமது பாவங்­களை அறிந்து, உணர்ந்து மனம் வருந்தி மனம் திருந்தும் காலம்.மனம் திரும்­பு­தலே தவக்­கா­லத்தின் அடிப்­படை. அதற்கு முதலில் எதி­லி­ருந்து மனதைத் திருப்ப வேண்டும் எனும் புரிதல் அவ­சியம். மிக முக்­கி­ய­மாக பாவத்­தி­லி­ருந்து நாம் திரும்ப வேண்டும். இந்தக் காலத்தில் ஆடம்­பர அணி­க­லன்கள், உணவு, கேளிக்கை, பொழு­து­போக்கு இவற்றை வெறுத்து அதன் மூலம் மிச்­சப்­ப­டுத்­தப்­படும் பணத்தை ஏழை, எளி­ய­வர்­க­ளுக்கு வழங்­கு­வதை பலரும் கடை­ப்பி­டிக்­கின்­றனர். சிலர் வெள்­ளிக்­ கி­ழமை தோறும் அன்­ன­தானம் இடும் வழக்­கத்தைக் கொண்­டி­ருக்­கின்­றனர்.  இதனை “உன் வலது கை செய்­வதை உனது இடது கை அறி­யா­தி­ருக்­கட்டும்” என கடவுள் கூறு­கிறார். நோன்பு இருப்­பது பிற­ருக்குத் தெரி­யாமல் இருப்­பதே நல்­லது என்­கிறார் இயேசு. நோன்பு இருப்­பதை பெரு­மைக்­கா­கவும், புக­ழுக்­கா­கவும், சடங்­கிற்­கா­கவும் செய்­யாமல் சுய விருப்­பத்­தோடும் இறை­வனில் சர­ணா­கதி அடையும் மன­நி­லை­யு­டனும் செய்ய வேண்­டு­மென்­பதையே இறைவன் விரும்­பு­கிறார்.

இறை­வனின் அருளைப் பெற விழை­ப­வர்கள் தங்­களைத் தாழ்மை நிலைக்குத் தள்ளி இறை­வனை முழு மன­துடன் ஏற்றுக் கொள்தல் அவ­சியம். அதையே ‘சாம்பல் புதன்’ நினை­வூட்­டு­கி­றது

நமது பாவங்களுக்காக  இயேசு கிறிஸ்து தனது உயிரை விட்டார். நாமோ தொடர்ந்து பாவம் செய்கிறோம், தண்டனைக்கான நியாயத் தீர்ப்பு நாளை நாம் மறந்தே போய் விடுகிறோம். அதை நினைவில் கொள்வதற்கான அழைப்பாக நாம் இந்தத் தவக்காலத்தை மனதில் கொண்டு மனம் திரும்பி கடவுளின் பிள்ளைகளாக வாழ இந்தப் புனித  தவக்காலம் நமக்கு வலியுறுத்துகிறது.

–ரெஜினா மதிவதனி ஜோர்ஜ்–

படப்பிடிப்பு : ஜே. சுஜீவ குமார்