ஹங்வெல்ல மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் தாக்குதலுக்குள்ளாகி இருவர் பலி !

40 0

ஹங்வெல்ல மற்றும்  தெல்தெனிய ஆகிய பிரதேசங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில்  42 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது சில நபர்களுடன் ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

காயமடைந்தவர் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட நபர் காயமடைந்த நிலையில் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) போயவலான  பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி – தெல்தெனிய போயவலான பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவராவார்.

இவர் நேற்று (14) மாலை இடம்பெற்ற நிகழிவொன்றில் கலந்து கொண்ட போது ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த தகராறின் போது சந்தேக நபரால் காயமடைந்த மற்றுமொரு பெண்ணொருவரும்  நபரொருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போயவலான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.