வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி பிணையில் விடுதலை !

159 0
வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று  வெள்ளிக்கிழமை (12) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில்கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் நீதிமன்ற கட்டளையினை மீறியதாக தெரிவித்து வவுனியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டதுடன் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று (12)  வரை  விளக்கமறியலில் வைக்கப்பட்டார் . மற்றைய பெண் அன்றையதினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த வழக்கானது இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சங்கத்தின்தலைவியை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்க  நீதவான் உத்தரவிட்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா,

நாங்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்கே அனுமதி கேட்டிருந்தோம். மாறாக எந்தவிதமான வன்முறைகளையும் நாம் மேற்கொள்ளவில்லை.

அரச சொத்துக்களை சேதப்படுத்தவில்லை வீதியினை மறிக்கவில்லை. ஆனால் பொலிஸார் எங்களை பெண்கள் என்றும் பார்க்காது அநாகரிகமான முறையிலேயே கைதுசெய்தனர்.

கொலைக்குற்றங்களை செய்தவர்களை கூட இப்படி நடாத்தியிருக்கமாட்டார்கள். இது எமக்கு மனவருத்தமாக உள்ளது.

நீதிக்கான குரல்களை நசுக்கும் வன்மையான செயற்பாடகாவே நாம் இதனை பார்க்கின்றோம். என்றார்.