எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இடமான திருகோணமலையில் நாம் இன்று கூடியிருப்பது நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதையே குறிக்கின்றது என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மெக்சயர் அரங்கில் சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய நடைபெற்றுக்கொண்டிருக்கும் யொவுன்புர – 2017 இன் நேற்றைய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, வடக்கு, கிழக்குத் தலைவர்கள் அனைவரும் முதன்முறையாக யொவுன்புர நிகழ்வில் ஒன்றுகூடியுள்ளனர்.
தமிழ் கட்சியின் தலைவரின் இடத்தில் நாமெல்லோரும் முதன்முறையாக ஒன்றுகூடியுள்ளோம். அவர் எங்களை அழைத்து ஒத்துழைப்பு வழங்கினார். இது நாட்டில் இப்போது நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதையே சுட்டி நிற்கின்றது.
எனக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் வயது போய்விட்டது. எமது இளமைக்காலத்தில் நாம் போரையே பார்த்தோம். இன்றைய இளைஞர், யுவதிகளின் காலத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே எமது இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்தன எனவும் தெரிவித்துள்ளார்.