“நீ சாகிறதுக்கு தானே போனனி, செத்துப்போ” எனக் கூறி, தீக்குச்சியை கொளுத்தி மகள் மேல் பற்ற வைத்த தந்தை!

238 0

யாழ்ப்பாண மாவட்டம் அளவெட்டி மத்தியில் கடந்த வாரம் தந்தையால் தீமூட்டி கடுமையான காயங்களுக்குள்ளான பெண்ணொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

அளவெட்டி மத்தியைச் சேர்ந்த ஒரே ஒரு பெண் பிள்ளையான திருவிளங்கம் ஜெனனி என்ற 27 வயது யுவதியே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த மார்ச் மாதம் 25ஆம் நாள் குடிபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை உணவுக்காக மனைவியையம் மகளையும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த குறித்த மகள், இவ்வாறு ஒவ்வொருநாளும் அசிங்கப்படுவதைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லையெனக்கூறி தற்கொலை செய்வதற்காக தன்மீது மண்ணெண்ணையை ஊற்றியுள்ளார்.

பின்னர் தாயின் முயற்சியினால் தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்ட குறித்த மக்கள் குளிப்பதற்காக கிணற்றடிக்குச் சென்றுள்ளார்.

அந்த இடத்துக்கு சென்ற குறித்த தந்தை, “நீ சாகிறதுக்கு தானே போனனி, செத்துப்போ” எனக் கூறி, தீக்குச்சியை கொளுத்தி மகள் மேல் பற்ற வைத்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த தாய் தீயில் பற்றி எரிந்த மகளை அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அன்றைய தினமே அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

மேற்படி யுவதியின் மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த யுவதி தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெறும் போது காவல்துறையினருக்கு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்படி தந்தை கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.