இலங்கையின் மூன்றாவது வைத்தியசாலையான குருநாகல் போதனா வைத்தியசாலையில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெகுசன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார, சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரண, அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் நாயகம், ஏனைய அதிகாரிகள் அடங்கிய குழுவினர், வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட குழுவினருடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
குருநாகல் மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் மருத்துவ தேவையை கருத்திற்கொண்டு வைத்தியசாலையில் காணப்படும் பிரதான தேவைகள் மற்றும் பற்றாக்குறைகளை கண்டறியும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, வைத்தியசாலையின் குறைபாடுகளும், மருத்துவ தேவைகளும் சுட்டிக்காட்டப்பட்டதோடு, குறைபாடுகளுக்கு விரைவான தீர்வுகளை காண தேவையான நிதியினை விரைவில் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




