மாணவர்களை இலக்கு வைத்து போதைமாத்திரைகளை விற்பனை செய்தவர் கைது

29 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாடசாலை மாணவர்களையும், இளைஞர்களையும் இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த  நபரொருவர்  300 போதை மாத்திரைகளுடன் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும்  ஆடைதொழிற்சாலை ஊழியர்களை இலக்கு வைத்து குறித்த சந்தேக நபர் போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்று வியாழக்கிழமை (21) புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் 300 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கைது செய்வதற்கான முயற்சி மேற்கொண்ட போது பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு நேசன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு போதை மாத்திரையினை  250 ரூபாவிற்கு  நகர் பகுதியில் இவர் விற்பனை செய்து வந்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் புதுகுடியிருப்பு பகுதியில் பல்வேறுபட்ட இடங்களில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் சந்தேக நபரை  இன்று வெள்ளிக்கிழமை (22) நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக  தெரிவித்தனர்.