மோடி படம் போடாதது ஏன்? – தமிழிசை

330 0

201607231252194665_Tamilisai-soundararajan-says-Why-Modi-image-appearance-Metro_SECVPFமத்திய அரசின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படும் மெட்ரோ ரெயில் திட்ட விழாவில் பிரதமர் மோடியின் படம் போடாதது கண்டனத்துக்குரியது என்று தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை மெட்ரோ ரெயில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.
இந்த விழா தொடர்பாக வெளியிடப்பட்ட தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறவில்லை. இதற்கு தமிழக பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் மத்திய அரசின் பங்களிப்பு மற்றும் நிதி உதவியுடன் நிறைவேற்றப்படுகிறது.மெட்ரோ ரெயில் திட்டத்தை தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் நிறைந்த திருவொற்றியூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. அந்த கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜனதாவும் பல போராட்டங்களை நடத்தியது நினைவு கூறத்தக்கது.

மக்களின் கோரிக்கையை மதித்து மத்திய அரசு இந்த திட்டத்தை விரைவுபடுத்தி ஒப்புதல் வழங்கி நிதியும் ஒதுக்கி இருக்கிறது.மத்திய அரசின் பங்களிப்புடன் நடைபெறும் திட்டத்தில் பிரதர் மோடியின் படம் இடம் பெறாதது ஏன்?அரசு விளம்பரங்களில் முதல்-மந்திரிகள் படம் தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய போது பெருந்தன்மையுடன், மாநில முதல்வர்கள் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள். அவர்கள் படம் இடம் பெறவேண்டும் என்று கருத்து தெரிவித்தது மோடி தலைமையிலான மத்திய அரசு.

அப்படிப்பட்ட மத்திய அரசின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்படும் திட்ட விழாவில் பிரதமர் மோடியின் படம் போடாதது கண்டனத்துக்குரியது.வருங்காலங்களில் மத்திய அரசின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் திட்டங்களில் பிரதமர் படம் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.பிரதமர் மோடி தனது படம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பமாட்டார். ஆனால் மத்திய அரசு உதவி செய்யும் திட்டங்களை மக்கள் மத்தியில் தெரியப்படுத்த பிரதமர் படம் அவசியம்.இனிவரும் நிகழ்வுகளில் இந்த மாதிரியான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.