எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் 27/ 2 ல் கேள்விகளை எழுப்பும்போது நிலையியற் கட்டளையை துஷ்பிரயோகம் செய்துள்ளார். அது தொடர்பில் சபாநாயகர் உரிய தீர்மானத்தை அறிவிக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (01) எதிர்க்கட்சித் தலைவர் 27/2ல் கேள்விகளை எழுப்பிய போது குறித்த கேள்விக்கு மேலதிகமாக மேலும் கேள்விகளை எழுப்பினார்.
அதன் போது அவர் எழுப்பிய எந்த கேள்விக்கு பதில் கூற வேண்டும்? என பதில் கூறுவதற்காக தயாராகவிருந்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர சபாநாயகரிடம் வினவினார்.
அதன் போது சபையில் ஏற்பட்ட சர்ச்சையின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.
அதன் போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில், 27/2 இன் கீழ் கேள்விகளை எழுப்பும் போது அதற்கு மேலதிகமான கேள்வியையும் எழுப்ப முடியுமா? அது தொடர்பில் உத்தரவொன்றை சபாநாயகர் பிறப்பிக்க வேண்டும், நாளை முதல் அது நடைமுறைக்கு வர வேண்டும்.
சபாநாயகருக்கோ அல்லது எதிர்க்கட்சித் தலைவருக்கோ தேவையான விதத்தில் நிலையியற் கட்டளையை துஸ்பிரயோகம் செய்ய முடியுமானாலும் ஆளும் கட்சி அவ்வாறு செயற்படாது.
பாராளுமன்றத்திலிருந்து விலகிச் செல்லும் தினத்திலும் குறித்த நிலையியற் கட்டளை எதிர்காலத்திற்காக பாதுகாத்து வழங்கப்பட வேண்டும் என்றார்.