கிளிநொச்சி வட்டக்கச்சியில் இராணுவ வசமுள்ள பண்ணை விவசாய நிலங்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் கிளிநொச்சி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டக்கச்சியில் பண்ணையாக இயங்கி வந்த 120 ஏக்கர் விவசாய நிலம் மக்களின் பாவனைக்கு கையளிக்க வேண்டும் என கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட்டக்கச்சி அரச விவசாய பண்ணையை விவசாய திணைக்களத்திடம் ஒப்படை, பண்பட்ட நிலத்தை பாழாக்காதே, இராணுவம் பண்ணையில் இளைஞர்கள் தெருவில் எனும் பதாதைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டமானது வட்டக்கச்சி விவசாய பண்ணையின் முன்றலில் ஆரம்பமாகி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்தலுடன் நிறைவடைந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.