முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா காலமானார்.

194 0

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த துணை தலைவருமான பொன்னம்பலம் செல்வராசா இன்று இறைபதம் அடைந்தார்.

தனது 77 ஆவது வயதில் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தியுள்ள அன்னாரின் உடல் மட்டக்களப்பு நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பொன் செல்வராசாவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று பி.ப 04.00 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயான மின் தகன சாலையில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1946 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதி பிறந்த பொன்னம்பலம் செல்வராசா, ஒய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தராவார்.

கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

எனினும் 2000 ஆம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அவரால் நாடாளுமன்றத்திற்கு தெரிவாக முடியவில்லை.

இதனையடுத்து கடந்த 2001 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20 ஆம் திகதி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை கழகம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கின.

அதன்பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பொன்னம்பலம் செல்வராசா மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார்.

எனினும் மீண்டும் கடந்த 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அவர் தோல்வி அடைந்திருந்தார்.