தடை செய்யப்பட்ட பொலித்தீன் பாவனை – யாழில் 14 பேருக்கு எதிராக வழக்கு

107 0

தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உடைமையில் வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் சுபோகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

உக்க முடியாத, 20 மைக்ரோனுக்கு குறைவான பொலித்தீன், வண்டே கப், பிளாஸ்ரிக் ஸ்ரோ, பிளாஸ்ரிக் இடியப்ப தட்டுக்கள், பிளாஸ்ரிக் பூமாலை, பொதியிடலுக்கு பயன்படுத்தும் கவர் பிளாஸ்ரிக் கரண்டிகள் என்பவை தடை செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.

அவற்றினை உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்தல் பயன்படுத்தல் ஆகியவை தண்டனைக்கு உரிய குற்றங்கள் ஆகும்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த 09 மாத கால பகுதிகளில் 13 தடவைகள் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். அதன் போது , உணவகங்கள் , விற்பனை நிலையங்கள் என 205 வர்த்தக நிலையங்களில் சோதனையிட்டுள்ளோம்.

அவற்றில் 14 உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எதிர்வரும் காலங்களிலும் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். எனவே வர்த்தகர்கள் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் என்பவற்றை விற்பனை செய்யவோ , பயன்படுத்தவோ உடைமையில் வைத்திருக்கவோ வேண்டாம் என தெரிவித்தார்.