தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 12ஆம் நாள்.

65 0

பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இன்று காலை (11.09.2023) எக்ஸ்ரைம் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் ,எக்ஸ்ரைம் மாநகரத்தில் சந்திப்பினை நிறைவுசெய்துகொண்டு,தொடர்ந்தும் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்றைய நாளில் வென்பேல்ட், செலஸ்ரா,கொல்மா ஆகிய நகரங்களை ஊடறுத்து செல்லவிருப்பதோடு, சந்திப்புக்களும் நடைபெறவுள்ளது.தொடர்ந்தும் நீதிக்கான எழுச்சிப் பயணம் பிரான்சு நாட்டிற்குள் தொடர்ந்தும் பயணிக்கவுள்ளது.

அனைத்துல குமுகாயத்தின் கதவுகளைத்தட்டிட,தொடர்ந்தும் அறவழிப்போராட்ட செயற்பாட்டாளர்கள் கடுமையான வெப்பக்காலநிலைக்கு மத்தியிலும் கடும்சவால்களுக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் ஈருருளிப்பயணத்தை தொடர்ந்தவண்ணமுள்ளனர். தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும்
நீதிகேட்டும் தமிழீழமே எமக்கான அரசியல் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் அறவழியில் ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்களை அன்புடன் வரவேற்று,தமிழர்கள் என்ற உணர்வுடன் இறுகப்பற்றி,இணைந்து பயணிக்க அன்புரிமையுடன் அழைக்கிறோம்.

தொடரும் அறவழிப்போராட்டம் பிரான்சு, சுவிஸ் ஊடாகப் பயணித்து 18.09.2023 அன்று ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்துடன் இணையவுள்ளது .இப்போராட்டத்தில் இனமான உணர்வுடன் அனைத்து உறவுகளும் இணைந்து ஒரணியில் உரிமைக்குரல் எழுப்பிடுவோம்.
வாருங்கள்…
“விடுதலைப் போராட்டத்தில் மக்கள் வெறும் பார்வையாளராக இராது, நேரடிப் பங்காளிகளாக மாறவேண்டும்”
– தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்