இராணுவ பஸ்ஸுக்கு தீ வைத்த சம்பவம் : பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கைது!

84 0

கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானை இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின்போது இராணுவ பஸ்ஸுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கங்கொடவில பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி மிரிஹானையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற கலவரத்தில் இராணுவ பஸ்ஸுக்கு தீ வைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவு குறித்த பஸ்ஸுக்கு தீ வைத்த பிரதான நபரை கைது செய்வதற்கு ஊடகங்கள் ஊடாக பொதுமக்களின் ஆதரவையும் கோரியிருந்தது.

ஒரு வருடம் 5 மாதங்களின் பின்னர், குறித்த நபர் மஹியங்கனை பிரதேசத்தில் இருப்பதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, அவர் தனது மனைவியுடன் மாலபேயில் தற்காலிகமாக தங்கியிருந்த வேளையில் குறித்த இடத்துக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்தோடு, இராணுவ பஸ்ஸுக்கு தீ வைத்ததையும் விசாரணை அதிகாரிகளிடம் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கைதான நபர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.