வட மாகாணத்தில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

124 0

கிளிநொச்சியில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேமிக்கும் நிகழ்ச்சி திட்டம் கரைச்சி பிரதேச சபையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சின் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இலத்திரனியல் கழிவுகளை முறையாகச் சேகரிக்கும் ஒரு வாரக் கால நிகழ்ச்சி திட்டம் வட மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிரதான நிகழ்வு கரைச்சி பிரதேச சபையில் இன்று (07.08.2023) காலை 9 மணிக்கு நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்வில் இலத்திரனியல் கழிவுகள் சேகரிக்கும் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றதுடன், இலத்திரனியல் கழிவுகளைச் சேகரிப்பதற்கு அடையாளமாகப் பயன் தரும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் பி பத்மகரன் உள்ளூராட்சி உதவியாளையாளர் அலுவலகத்தைச் சேர்ந்த மணிமேகலை மற்றும் சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாணத்திற்கான பணிப்பாளர் மகேஸ் ஜல்தோட்ட மற்றும் துறை சார்ந்த பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னாரில்  நிகழ்ச்சித் திட்டம்

மன்னார் மாவட்டத்தில் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சித் திட்டம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் இன்றைய தினம் (07.08.2023) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி திருமதி ஜே.எம்.ஏ.யக்கோ பிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்டான்லி டிமெல் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் மாவட்ட அலுவலகத்தினால் இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேகரிப்பதன் மூலம் சுற்றாடலை பாதுகாத்தலும், முகாமைத்துவம் செய்தலும்’ எனும் கருப்பொருளில் இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆகியோர் இலத்திரனியல் கழிவுகளை மாவட்ட பொறுப்பதிகாரியிடம் கையளித்துள்ளார்.

மேலும் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் பிரதேச செயலாளர்கள்,வைத்தியர் ஒஸ்மன் டெனி, அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள்,பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று திங்கட்கிழமை (07.08.2023) தொடக்கம் எதிர்வரும் (11.08.2023) வரை இலத்திரனியல் கழிவுகளை மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் ஒப்படைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 முல்லைத்தீவில் நிகழ்ச்சித் திட்டம்

இலத்திரனியல் கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல் சம்மந்தமான கூட்டம் இன்றைய தினம் ( 07.08.2023) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் காணப்படும் இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேகரித்து அதன்பின்னர் தகுந்த முறையில் அகற்றுதல் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மரம் நடுதல் தொடர்பான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் (காணி), மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகள், முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர், வலயக்கல்விப் பணி்ப்பாளர், மாவட்ட வனவளத் திணைக்களத்தின் அதிகாரி, மாவட்ட உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.