மன அழுத்தத்தால் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்கள்!

103 0

எமது மாணவர்கள் பல்வேறு காரணங்களினால் மன அழுத்தங்களுக்குள்ளாகி வருகிறார்கள். இதன் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே அவர்களால் சரிவரக் கற்றலை மேற்கொள்ள முடியவில்லை என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் மாணாக்க உழவர் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விதைப் பொதிகளையும் செய்முறை பயிற்சிகளையும் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (06.08 2023) நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், மாணவர்கள் மன அழுத்தங்களுக்குள்ளாகி போதை, வன்முறை என்றும் சமூகப்பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் ஒரு சாரார் தற்கொலை முடிவை நோக்கியும் செல்கிறார்கள்.

இவர்களை மன, அழுத்தங்களில் இருந்து விடுவிக்க வீட்டுத் தோட்டங்களில் அவர்களை ஈடுபடுத்துவதுதான் சிறந்த பரிகாரமாக அமையும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட வழிமுறையாகும்.

வீட்டுத்தோட்டங்கள் சுயசார்புப் பொருளாதாரத்தின் முதற்படி. வீட்டிலேயே எங்களுக்குத் தேவையான உணவுப் பயிர்களை உற்பத்தி செய்யக் கூடியதாக இருப்பதோடு வீட்டுக்கழிவுகளைப் பசளையாகப் பயன்படுத்துவதால் நஞ்சற்ற உணவையும் நாம் பெறக்கூடியதாக உள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கும், உணவு நெருக்கடிக்கும் வீட்டுத்தோட்டம் சிறந்த தீர்வாக அமையும். இந்த அனுகூலங்களைவிட மேலான அனுகூலமாக வீட்டுத்தோட்டங்கள் மனதை அலைபாயவிடாமல் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தவும் உதவுகின்றது. தோட்டங்களில் மண்ணைக் கைகளினால் அலையும்போது, மண்ணில் உள்ள பக்றீரியங்களைத் தொடும்போது உடலில் செரற்ரோனின் என்ற ஓமோன் சுரப்பது தூண்டப்படுகிறது.
இது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மை. சொற்ரோனின் மனச்சோர்வைக் களைந்து, மனஅழுத்தங்களில் இருந்து விடுபடவைத்து, மனரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு இரசாயனம் ஆகும்.

இயற்கையாக செரற்ரோனின் உருவாகுவதைத் தூண்டும் வீட்டுத்தோட்டச் செய்கையில் மாணவர்களை ஈடுபடுத்தினால் செயற்கையாக உற்சாகத்தைத் தூண்டும் ஆபத்தான போதைக்கு அவர்கள் அடிமையாக மாட்டார்கள்.

ஆசிரியர்கள் வீட்டுத்தோட்டம் என்றால் அது விவசாயம் பயிலுகின்ற மாணவர்களுக்கு மாத்திரம்தான் என்று நினைக்கிறார்கள்.

பெற்றோர்கள் வீட்டுத்தோட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்களின் படிப்புப் பாழாகிவிடும் என்று கருதுகிறார்கள். இந்த மனோநிலைகளில் மாற்றம் வேண்டும்.

பயிர்களைப் பீடிக்கும் பூச்சிகளால் பயிர்களுக்கு மாத்திரம்தான் சேதம். ஆனால், புத்தகப் பூச்சிகளாகவே வளரும் மாணவர்கள் தமக்கும் சமூகத்துக்கும் கேடாகவே அமைவார்கள்.

இதைப் புரிந்துகொண்டு ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களை வீட்டுத்தோட்டங்களில் ஈடுபடவைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.