அரசியல்வாதிகள் எம்மை பிரித்துவைத்தனர்

189 0

முந்தைய அரசியல்வாதிகளே இன, மத ரீதியாக எங்களை பிரித்து பிளவுபட வைத்தனர். ஆனால், தற்போதைய ஜனாதிபதி அனைவரையும் இன, மத ரீதியாக ஒன்றிணைத்து நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார யாழில் தெரிவித்துள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் க்ளோபல் பெயார் கண்காட்சியை யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (15) ஆரம்பித்துவைத்த அமைச்சர், அப்போது உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வுக்கு தமிழர்களின் பாரம்பரிய ஆடையை அணிந்து வந்திருந்தார் மனுஷ, நாம் எந்த ஆடை அணிந்தாலும் அழகாக இருக்கிறதென்றால் அதற்கு காரணம் எங்களது மனம் அழகாக இருப்பதுதான் என கூறினார்.

அத்தோடு இனியும் இன, மத ரீதியாக பிரிந்து நிற்காமல் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

 

தேசிய மொழியாக தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து இன, மத ரீதியான பேதங்களை ஏற்படுத்தி முன்னைய அரசியல்வாதிகள் எங்களை பிளவுபட வைத்தனர். அதனாலேயே இன, மத ரீதியாக நாங்கள் பிளவுபட்டிருந்தோம்.

நான் சிங்களவர்களின் தேசிய உடையை  அணிவதில்லை. ஆங்கிலேயர் உடைதான் அணிவதுண்டு. ஆனால், இங்கு தமிழர்களின் உடையை அணிந்து வந்துள்ளேன்.

இங்கு நான் அணிந்து வந்துள்ள ஆடையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எனது மனைவிக்கு அனுப்பியபோது இனிய தமிழ் என்றார். அதேபோன்று இங்கு என்னுடன் இருக்கின்ற பணியாளர் கூட இந்த உடை மிக அழகு என்று என்னிடம் கூறியிருந்தார். நாம் எந்த ஆடை அணிந்தாலும் அழகு என்றால் அதற்கு காரணம், எங்களது மனம் அழகாக இருப்பதுதான்.

ஆகையினால், நாங்கள் இன, மத ரீதியாக பிரிந்திருந்தது போதும். இனிமேல் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

குறிப்பாக, அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டை நாம் நோக்கினால் இன, மத பேதம் இல்லாததால்தான் அந்த நாடுகள் இப்படி வளர்ந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே, நாமும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டும்.

இந்த விடயத்தில் பல்வேறு நாடுகளை நாங்கள் உதாரணத்துக்கு எடுக்காமல் அருகிலுள்ள இந்தியாவை எடுத்துக்கொண்டால் அங்குள்ள அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்திலேயே செயற்படுகின்றனர். அதேபோல் நாங்களும் செயற்பட வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி இந்த நாட்டை கட்டியெழுப்ப நினைத்தாலும் சிலர் திட்டமிட்ட வகையில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவர்கள் யார், ஏன் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்றால் நாட்டை  கட்டியெழுப்புவதை விட வேறு அரசியல் காரணங்களே அவர்களுக்கு இருக்கின்றன.

நாட்டில் சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நாட்டை மீட்டெடுத்து முன்னோக்கி கொண்டுசெல்வதே ஜனாதிபதியின் நோக்கம். அதற்கேற்ற வகையிலேயே அவர் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். அத்தோடு நல்லிணக்கத்தை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் அதனை செயலாலும் செயற்படுத்துவதுதான் ஜனாதிபதியின் எண்ணக்கருவாகவும் இருக்கிறது.

ஆகையினால் நல்லிணக்க சமத்துவத்தை ஏற்படுத்த அனைவரும் ஓரணியாக இணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானது. அந்த வகையிலேயே தொடர்ச்சியான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக வடக்கில் உள்ள இளைஞர், யுவதிகள் இடைத்தரகர்களிடம் அதிகளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர். இங்குள்ள செல்வந்தர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

ஆனால், வறுமையில் வாடுகின்றவர்கள் பொருளாதாரத்தை இழந்து வாழ்க்கையை எப்படி முன்கொண்டுசெல்வது என சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்க்கையை மேம்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வடக்கு, தெற்கு என நான் வித்தியாசத்தை பார்க்கவில்லை. அனைவருடனும் பேசி பழகிய போது இன, மத ரீதியாக எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை. நல்லிணக்க சமத்துவத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

இதேவேளை முன்னைய காலங்களில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் தங்கள் பிரதேசங்களிலேயே தொழில் பயிற்சி நிலையங்களை அமைத்து வந்ததே தொடர்கதையாக இருக்கிறது. ஆனால், இதனை மாற்றி நான் யாழில் ஒரு பயிற்சி நிலையத்தை நிறுவுவேன்.

அனைவரும் ஒரே நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் பேணும் வகையில் செயற்படுவோம் என்றார்.