அடைந்த வீழ்ச்சியை ஒரே தடவையில் மீட்டெடுக்க முடியுமா?

174 0

நாடு அடைந்துள்ள வீழ்ச்சியை ஒரே தடவையில் மீட்டெடுக்க முடியுமா? வீழ்ச்சியை கட்டம் கட்டமாகவே சீர் செய்ய வேண்டியுள்ளது. எனவே அதற்கு உதவி புரியுங்கள். எதிர்காலத்தில் நாம் அனைவரும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும். எமது கட்சி மற்றும் எமது தலைவரின் நிலைப்பாடே இன்று வெற்றி பெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்தனகல பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஏதேனும் சிறியதொரு விடயத்தை பற்றிக்கொள்கிறார்கள். அடைந்துள்ள வீழ்ச்சியை ஒரே தடவையில் மீட்டெடுக்க முடியுமா? கட்டம் கட்டமாகவே பொருளாதார வீழ்ச்சியை சீர் செய்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். எனவே அதற்கு உதவி புரியுங்கள்.

எமது நாட்டில் இரண்டு தரப்பினரே இருக்க வேண்டும். வங்குரோத்து அடைந்த நாட்டை மீட்டெடுக்க முயற்சிக்கும் தலைவருக்கு உதவி செய்யும் தரப்பினர் மற்றும் அரசியல் நோக்கத்துக்காக அதனை தடுத்து தாம் அதிகாரத்துக்கு  வர முயற்சிக்கும் தரப்பினர். இந்த இரண்டு தரப்பினர்கள் மாத்திரமே இருக்க முடியும்.

எதிர்காலத்தில் நாம் அனைவரும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும். இருப்பினும் இதில் ஐக்கிய தேசிய கட்சி முன்னிலையில் இருக்க வேண்டும். எமது கட்சி மற்றும் எமது தலைவரின் நிலைப்பாடே இன்று வெற்றி பெற்றுள்ளது. கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.