பந்துல ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளை பாதுகாக்கின்றார்!

109 0

 காஸ்சிலிண்டர் மோசடி வெள்ளைபூண்டு மோசடி உட்பட பல ஊழல்கள் குறித்த விபரங்களை அம்பலப்படுத்திய நுகர்வோர் அதிகாரசபையின் முன்னாள் இயக்குநர் துசான் குணவர்த்தன மேலும் பல மோசடிகளை அம்பலப்படுத்த தயார் என குறிப்பிட்டுள்ளார்.

பல மோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர்களையும் வெளியிடதயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சதொச நிறுவனத்தினால் வெள்ளை இலச்சினை இடப்பட்டு சந்தைக்கு விடப்பட்ட பழுதடைந்த டின் மீன்  குறித்து அவர் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

டின்மீன் வெள்ளைபூண்டுமோசடி காஸ்சிலிண்டர் மோசடி குறித்து தகவல்கள் அம்பலமாகியுள்ள போதிலும் இந்தமோசடிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் இன்னமும் அதேபதவிகளில் உள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பந்துலகுணவர்த்தன  தனது நலன்களிற்காக ஊழல் அரசியல்வாதிகளை பாதுகாக்கின்றார் என துசான்குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க இந்த மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் நாட்டில் இடம்பெறும் விடயங்களை நாங்கள் அலட்சியம் செய்ய முடியாது இந்த காடையர்கள் தப்பிச்செல்ல அனுமதிக்க முடியாது நான் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என்னிடம் பல ஆவணங்கள் உள்ளன,ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவதற்கான ஆவணங்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய விபரங்களை நான் பகிர்ந்துகொண்டுள்ள போதிலும் எதிர்கட்சியினர் மௌனம் காக்கின்றனர் அவர்கள் எதனையும் செய்யவில்லை எனவும் நுகர்வோர் அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி தலைவருடன் நான் தகவல்களை பகிர்ந்துகொண்டேன் ஆனால் இந்த விடயங்கள் குறித்து அவர் அக்கறை காட்டவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.