வட கொரியா நாட்டினர் மலேசியாவை விட்டு வெளியேற தடை

243 0

மலேசியாவில் இருக்கும் வட கொரியா நாட்டினர் அங்கிருந்து வெளியேற தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ள மலேசிய அரசு கோலாம்பூரில் உள்ள வட கொரியா நாட்டு தூதரகத்தை தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளது.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் வட கொரியா அதிபரின் சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மலேசியாவுக்கான வட கொரியா தூதரை உடனடியாக தங்கள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக தங்கள் நாட்டில் இருந்த மலேசிய தூதரை வட கொரியா வெளியேற்றியது.

கிம் ஜாங் உன் படுகொலை தொடர்பாக வட கொரியா நாட்டை சேர்ந்த விமானி ஒருவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த மலேசிய அரசு அவரை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வட கொரியாவுக்கு கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், வட கொரியாவில் இருக்கும் மலேசிய நாட்டினர் யாரும் அங்கிருந்து வெளியேற கூடாது என்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக உத்தரவிட்டார். மலேசியாவில் இருக்கும் தங்கள் நாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் ஆகிறது என்றும் வட கொரியா தெரிவித்தது.

இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எங்கள் நாட்டு மக்களை உடனடியாக தாய்நாட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று மலேசியா கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கையை பரிசீலிக்க வட கொரியா மறுத்துவிட்ட நிலையில் தங்கள் நாட்டில் தங்கியுள்ள வட கொரியா நாட்டினரை தாய்நாட்டுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மலேசிய அரசும் பதிலடி கொடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை மலேசியா துணை பிரதமர் அஹமத் சாஹித் ஹமிதி வெளியிட்டார்.

மேலும், கோலாலம்பூரில் உள்ள வட கொரியா நாட்டு தலைமை தூதரகத்தை மலேசிய அரசு தங்களது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.