வட கொரியாவின் தொடரும் அத்துமீறல்: ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது

242 0

வட கொரியா மீது மேலும் புதிய தடைகளை விதிக்கவும் வட கொரியாவின் தொடரும் அத்துமீறல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபை நாளை அவசரமாக கூடுகிறது.

உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்குள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நான்கு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்தது. அடுத்தடுத்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த இந்த ஏவுகணைகளில் மூன்று ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாகவும் தென் கொரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

சுமார் ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணைகள் 260 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து சென்று திட்டமிட்ட இலக்கை தாக்கியதாக செய்திகள் வெளியாகின.

ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாகவே இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டதாக வட கொரியா தெரிவித்திருந்தது.

இதைப் போன்ற ஆத்திரமூட்டும் செயல்பாடுகளை வட கொரியா கைவிட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டரெஸ் குறிப்பிட்டிருந்தார்.

வட கொரியாவின் இந்த பேரழிவுப் பாதையை இந்த உலகம் அனுமதிக்காது என ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதரும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின்மீது தாக்குதல் நடத்தப் போவதாக வட கொரியா மிரட்டியுள்ள நிலையில் இந்த நெருக்கடியை சமாளிக்கவும் வட கொரியா மீது மேலும் புதிய தடைகளை விதிக்கவும் வட கொரியாவின் தொடரும் அத்துமீறல் தொடர்பாக விவாதிக்கவும், அந்நாட்டுக்கு எதிராக மேலும் சில புதிய தடைகள் விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கவும் ஐ.நா. பாதுகாப்பு சபை நாளை அவசரமாக கூடுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தில் (உள்நாட்டு நேரப்படி) நாளை காலை பத்து மணிக்கு தொடங்கும் இந்த அவசர கூட்டத்தில் பாதுகாப்பு சபையில் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.