ஆலயங்களில் சிறுவர்கள் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு ; சமூகம் இறுக்கமான மௌனத்தை கடைப்பிடிப்பது ஏன்?

140 0

பெரியவர்களின் பராமரிப்பில் உள்ள சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள போதிலும், மதவழிபாட்டுத்தலங்களில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் தலைப்புச்செய்திகளில் இடம்பிடிப்பதில்லை.

மதவழிபாட்டுத்தலங்களில் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து சிலர் துணிச்சலுடன் கருத்தை தெரிவித்தாலும் எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும் இவ்வாறான சம்பவங்களை வெளிப்படுத்துவது மதத்தை நிந்திக்கும் செயல் என பலர் கருதுகின்றனர்.

குழந்தை தேரர்களின் வாழ்க்கை குறித்து சமூகம் மௌனத்தை கடைப்பிடிக்கவே விரும்புகின்றது.

கடந்த வாரம் எட்டுவயது பௌத்தமதகுருமார் ஒருவர் சக பௌத்தமதகுருமார் மூவரால் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளான நிலையில் பேராதனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் – அவரது காயங்கள் ஆபத்தானவை என தகவல் வெளியாகியிருந்தது.

பௌத்தமதகுருவாக  45 நாட்களிற்கு முன்னரே தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்ட அந்த எட்டுவயது மதகுரு புத்தருக்கு பூக்களை வைத்து காணிக்கை செலுத்தும்வேளை பிரார்த்தனைகளை ஒழுங்காக முன்னெடுக்கவில்லை என்ற காரணத்தினால் சீற்றமடைந்த மூத்த துறவிகள் இந்த செயலில் ஈடுபட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த 8 வயது பௌத்தமதகுரு கம்பொல புசல்லாவையில் உள்ள ஆலயத்தில் வளர்ந்தவர்.

பொலிஸாரிடம் இந்த சம்பவம் குறித்து தாங்கள் முறைப்பாடு செய்துள்ள போதிலும் மூன்று பௌத்ததுறவிகளிற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்க்பபட்ட 8 வயது துறவியின் உறவினர்கள் தெரிவித்தனர்.

நாங்கள் தலைமை மதகுருவிடம் 8 வயது பிக்குவின் காது தலையில் ஏன் காயங்கள் காணப்படுகின்றன ஏன் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்படுகின்றார் என விசாரித்தவேளை அவர் ஒருவகை நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என அவர் பதிலளித்தார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வேன் எனவும் தலைமை மதகுரு தெரிவித்தார் என  உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும் பின்னர் உறவினர்களே பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதேவேளை இதுபோன்ற மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.16 வயது பௌத்த துறவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 58 வயது பௌத்த மதகுருவை அரநாயக்க பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு பௌத்தமதகுருவை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ளனர்.

கலாச்சார வெட்கக்கேடு

இளம் பிக்குகள் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்படுவது குறித்த தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவருகின்றது என்பது  கவலை தரும் யதார்த்தம்.

இலங்கையிலிருந்தும் வெளியிலிருந்தும் இந்த சம்பவங்கள் குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

இளம் பிக்குகளின் பாதுகாப்பு பராமரிப்பு பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட மூத்த மதகுருமாரே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்- அனைத்துவகையான துஸ்பிரயோகங்களும் இடம்பெறுகின்றன.சிறுவர்களே அதிகம் இலக்குவைக்கப்படுகின்றனர்.

துறவறம் பூண்டவர்களின் சமூகத்தின் செயற்பாடுகள் குறித்து கண்காணிப்பும் போதியளவு பொறுப்புக்கூறலும் இன்மையுமே  இவ்வாறான துஸ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான காரணம்.

பல பௌத்தமதகுருமாரும் ஆசிரியர்களும் பௌத்தசமூகத்தில் பெரும் மதிப்பிற்குரியவர்களாக கருதப்படுகின்றனர் இதன் காரணமாக அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் பகிரங்கமாவதில்லை அல்லது கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை.

மரபுகள் மற்றும் சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதில் உள்ள தர்மசங்கடங்கள்

கடந்த வருடம் பௌத்த ஆலயங்களில் தொடர்ச்சியாக சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றவேளை 12 வயதிற்கு உட்பட்டவர்களை மதகுருக்களாக்குவதற்கு ருகுணு பல்கலைகழக துணைவேந்தர் அக்குரட்டிய நந்ததேரர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அனைத்து பௌத்த மதபீடங்களும் 12 வயதிற்கு உட்பட்ட பாலபிக்குகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

புத்தரின் காலத்திலேயே ஒழுக்கமற்ற பௌத்தமதகுருமார் வாழ்ந்துள்ளனர் இதன்காரணமாகவே பௌத்தமதகுருமார்களிற்கு பல ஒழுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன,இன்றும் அவ்வாறான ஒழுக்கமற்ற பௌத்தமதகுருமார் உள்ளனர் ஆனால் அவர்களை கண்காணிக்க போதிய பொறிமுறையில்லை பௌத்த நிக்காயாக்களின் தலைமைப்பீடங்கள் இதனை செய்வதில்லை  சிரேஸ்ட பௌத்தமதகுருமார் ஒழுக்காற்று விதிமுறைகளை பின்பற்றினால் ஆலயங்களில் துஸ்பிரயோகங்கள் இடம்பெறாது என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த விடயங்கள் குறித்து நாட்டின் மததலைவர்கள் எதுவும் பேசாதநிலையிலேயே ருகுணு பல்கலைகழக துணைவேந்தர் அக்குரட்டிய நந்ததேரரின் இவ்வாறான கருத்து வெளியாகியிருந்தது.

பௌத்தஆலயங்களில் சிறுவர் துஸ்பிரயோகங்களிற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எவரும் முன்வராதமைக்கு  கலாச்சார சமூக மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட நிலை போன்றவற்றின் மூலம் உருவாகும் குழப்பமான பல விடயங்களே காரணமாக உள்ளன.

துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்பட்ட சிறுவர்கள் தங்களிற்கு ஏற்ற பாதிப்பு குறித்து கருத்து தெரிவிக்க அச்சப்படலாம் அல்லது அதனை தெரிவிப்பதால் அவமானப்படவேண்டிய நிலையேற்படும் என கருதலாம்.

இதேவேளை போதிய கல்வியறிவு அல்லது விழிப்புணர்வு இல்லாதவர்கள் துஸ்பிரயோகங்களை ஏற்றுக்கொள்ளும் மனோநிலையில் கூட காணப்படலாம்.

ரஜீபன்