தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டமூலங்களுக்கு இடமளிக்க போவதில்லை

93 0

மே தினத்துக்கு பின்னர் புதிய இலக்கு நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டமூலங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க என்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பொரள்ளை கெம்பல் மைதானத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற  மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஆட்சியில் இருந்த போதும்,எதிர்க்கட்சியில் இருந்த போதும் உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாத்துள்ளோம்.வெற்றியை காட்டிலும்,தோல்வியின் போது உழைக்கும் மக்கள் எமக்கு ஆதரவளித்துள்ளார்கள.

வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளோம். நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

பாரிய போராட்டத்துக்கு மத்தியில் நாட்டில் தற்போது ஜனநாயகம் மற்றும் சட்டம்,ஒழுங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.ஜனநாயகத்துக்கு அமையவே சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.

மே தினத்துக்கு பின்னர் புதிய இலக்கு நோக்கி அனைவரும் செயற்பட வேண்டும்.தொழிலாளர்களின் உரிமைகளை பாதிக்கும் சட்டமூலங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்க என்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.