டிரம்புக்கு எதிராக தொலைபேசி ஒட்டுக்கேட்பு என்பதில் உண்மையில்லை – உளவுத்துறை முன்னாள் தலைவர்

249 0

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்பின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்ட குற்றச்சாட்டில் உண்மையில்லை என அந்நாட்டு உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தொழிலதிபரும்  தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். இந்நிலையில் தான் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட, அக்டோபர் மாதத்தில் அப்போதைய ஒபாமா அரசால் தனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘அதிபர் தேர்ல் நடைபெறுவதற்கு சற்று முன் தனது டெலிபோன் ஒட்டுக்கேட்கப்பட்டதுடன் முறைகேடாக பதிவும் செய்யப்பட்டது. இதற்கு அப்போதைய அதிபர் ஒபாமாவே காரணம்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அந்நாட்டு உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர், டிரம்புக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் உளவுத்துறை ஈடுபடவில்லை எனக் கூறியுள்ளார். கிளாப்பர் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை தலைவராக இருந்தவர்.

டிரம்பின் குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே முன்னாள் அதிபர் ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.