உண்ணாவிரதம் இருந்த ஈழ அகதிகள் வைத்தியசாலையில்

250 0

தஞ்சக் கோரிக்கை விடுத்த 350ற்கும் மேற்பட்ட ஈழ தமிழ் அகதிகள், இந்தோனேசியாவின் தற்காலிக அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக அங்குள்ள அகதிகள் போருக்கு பிறகும் இலங்கையில் தொடர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக படகு வழியே இந்தோனேசியா வந்தவர்கள் என சொல்லப்படுகின்றது.

இதில் பலருக்கு தஞ்சக்கோரிக்கை மறுக்கப்பட்டு இலங்கைக்கே திருப்பியனுப்பப்படும் சூழல் நிலவுவதாக தெரியவந்துள்ளது. அப்படியான நிலையில், இந்தோனேசியாவின் மெடன் பகுதியில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் நான்கு குடும்பத்தினர் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளனர்.

அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து இப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மூன்றாம் தரப்பு நாடுகளில் குடியமர்த்தப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையிலும், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தொடர்ந்து சித்ரவதைகளும் பாலியல் வன்முறைகளும் நிகழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் தெரிவித்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படுவது தங்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமையக்கூடும் என தெரிவிக்கின்றனர்.