விம்பிள்டன் டென்னிஸில் ரஷ்ய, பெலாரஸ் போட்டியாளர்களுக்கு அனுமதி

85 0

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக இப்போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

உக்ரேன் மீதான படையெடுப்பு காரணமாக  ரஷ்யாவுக்கும் அதன் நட்பு நாடான பெலாரஸுக்கும்  பல விளையாட்டுச் சம்மேளனங்கள் தடை விதித்தன.

கடந்த வருடம் நடைபெற்ற விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் ரஷ்யா, பெலாரஸ் போட்டியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில், இவ்விரு நாடுகளின் போட்டியாளர்கள் சில நிபந்தனைகளின் கீழ், சுயாதீன போட்டியாளர்களாக எதிர்வரும் ஜூலையில் நடைபெறும் விம்பிள்டன் போட்டிகளில் பங்குபற்றலாம் என அகில இங்கிலாந்து டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது.

உக்ரேன் மீதான படையெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்போர் மற்றும், இந்நாடுகளிலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் அரச கட்டுப்பாட்டு நிறுவனங்களிடமிருந்து அனுசரணை  பெறும் போட்டியாளர்களுக்கு தொடர்ந்தும் தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் நடைபெறும் ஏனைய டென்னிஸ் போட்டிகளுக்கும் இத்தீர்மானங்கள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசு, பிரித்தானிய புற்றரை டென்னிஸ் சங்கம், சர்வதேச டென்னிஸ் அமைப்புகளுடனான பேச்சுவார்த்தைகளின் பின் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அகில இங்கிலாந்து டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.

கிவிட்டோவா எதிர்ப்பு

ரஷ்யா, பெலாரஸ் நாடுகளின் போட்டியாளர்கள் இவ்வருட விம்பிள்டன் போட்டிகளுக்கு அனுமதிக்கும் தீர்மானத்துக்கு முன்னாள் சம்பியனான பெட்ரா கிவிட்டோவா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

செக் குடியரசைச் சேர்ந்த கிவிட்டோவா 2 தடவைகள் விம்பிள்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை வென்றமை குறிப்பிடத்தக்கது.

‘முதலாவதாக நான் எப்போதும் போரை எதிர்க்கிறேன். உக்ரேனின் மக்கள் வீரர்கள் குறித்து நான் கூடுதல் கவலையடைந்துள்ளேன்’ என  செய்தியாளர்களிடம் பேசுகையில் பெட்ரா கிவிட்டோவா கூறினார்.

அவர்கள் (ரஷ்ய, பெலாரஸ் போட்டியாளர்கள்) அனுமதிக்கப்படக்கூடாது என நான் கருதுகிறேன். ஓலிம்பிக் போட்டிகளுக்கும் அனுமதிக்கப்படக் கூடாது. இதில் நான் உக்ரேனியர்களின் பக்கம் உள்ளேன்’ என கிவிட்டோவா கூறினார்.