பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கையர் தமிழக கடலோர காவல் படையினரால் கைது!

119 0

பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர் ஒருவரை இந்திய கடலோர காவல்படையினர் தமிழக கடற்பகுதியில் வைத்து நேற்று (25) கைதுசெய்துள்ளனர்.

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கையரான ஜெகன் பெர்னாண்டோ மனோகரன் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நபர் இலங்கையிலிருந்து அகதியாக வெளியேறி, நிரந்தர விசா பெற்று, லண்டனில் தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், அவர் நேரடியாக இலங்கைக்குச்  செல்ல முடியாத காரணத்தால் தமிழ்நாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவர் இந்தியாவுக்குச் சென்று, படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு வர திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மேலதிக விசாரணைக்காக அவர் இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.