யாழ்.பல்கலை சம்பவத்துக்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு

324 0

jhu 14-11-01யாழ். பல்கலைக்கழக சம்பவத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் . இந்த விடயம் தொடர்பில் இதுவரைக்கும் தமிழ் அரசியல் வாதிகள் மௌனிகளாகவே உள்ளனர். இவர்களது  மெளனம் எமக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது .சிங்களவர்களாகிய நாம் மாறிவிட்டோம் . ஆனால் தமிழ் தலைமைகளும் பல்கலைக்கழகமும் இன்னும் மாறாதது போன்றே தோன்றுகின்றது . சி.வி விக்கினேஸ்வரன் மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோரின் நிலைப்பாடுகள் தொடர்பில் நாம் அவதானத்துடன் உள்ளோம். தமிழர்களின் நிலைமை தொடர்ந்து இவ்வாறு இருக்குமேயானால் இன நல்லிணக்கம் என்பது கேள்விகுறியாக மாறிவிடும் என ஜாதிக ஹெல உறுமய குற்றம்சுமத்தியது.

இந்த சம்பவம் பிரபாகரனின்  நோக்கங்களை பிரதிபலிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது . எனினும் இதனை நல்லிணக்கம் ,சமாதானம் என்ற போர்வையில் மூடிமறைப்பதற்கு இடமளிக்க முடியாது . குற்றம் இழைக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தண்டிக்கப்படல் வேண்டும். இதனை இராணுவத்தின் மீது சுமத்துவதற்கு புலம்பெயர்ந்த அமைப்பினர்களும் தமிழ் தலைமைகளும் முயற்சித்து வருவதாகவும் அக்கட்சி குறிப்பிட்டது .

நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதான காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேல் மாகாண சபை உறுப்பினரும் அக்கட்சியின் ஊடக பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார் . அங்கு நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேலும் குறிப்பிடுகையில் ,

கடந்த சனிக்கிழமையன்று யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீடத்தின் முதலாம் தர மாணவர்கள் இணைப்பின் போது கண்டி நடனத்தை அரகேற்றியமைக்காக சிங்கள மாணவர்கள் கடுமையான முறையில் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர் . இந்த சம்பவத்தை நோக்கும் போது பிரபாகரன் விதைத்த பயங்கரவாதம் மீளவும் ஆரம்பிப்பது போன்றே தோன்றுகின்றது. தற்போது தெற்கிலுள்ள கொழும்பு மற்றும் பேராதெனிய பல்கலைகழகங்களில் தமிழ் மாணவர்கள் பரத நாட்டியம் அரகேற்றம் செய்வதற்காக நாம் இவ்வாறான தாக்குதல்களை நாம் முன்னெடுக்கவில்லை . ஆனால் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய சம்பவம் மிலேச்சனமானது மாத்திரமின்றி கவலையளிக்கும் செயற்பாடாகும் .

சமவுரிமை மற்றும் நல்லிணக்கம் யாழ்ப்பாணத்தில் உள்ளதா என்பது கேள்விகுறியாக உள்ளது. இனவாத பிரவேசமே தற்போது இடம்பெற்றுள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பில் இனவாத ரீதியாக பிரவேசிக்க வேண்டும் என கோரப்பட்டாலும் அதற்கான தேவைகள் எமக்கு ஒருபோதும் கிடையாது. யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தொடர்ந்தும் சிங்கள மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கே இந்த நிலைமை காணப்படும் என்றால் மீள்குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நிலைமை எவ்வாறு காணப்படும் என்பதனை சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த சம்பவம் முதற்தடவையல்ல. விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபகாரனின் செயற்பாடுகளும் இவ்வாறே அமைந்தன. இதன்காரணமாக தமிழ் அரசியல் தலைமைகளின் உயிர் கூட பறிக்கொடுக்கப்பட்டது.

1983 ஆம் இனகலவரத்தின் பின்னர் சிங்கள மக்களின் எண்ணங்களிலும் சிந்தனைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சிங்கள மக்களின் மனநிலைமை தொடர்ந்து ஒரே மாதிரியாக இருந்திருப்பின் பௌத்தர்களின் புனித தளமாக போற்றப்படும் கண்டி தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தப்பட்ட போது சிங்கள மக்கள் நினைத்திருந்தால் கண்டியிலுள்ள தமிழ் வியாபார தளங்களை தாக்குதலுக்கு உள்ளாகியிருக்க முடியும். பேராதெனிய பல்கலைகழக தமிழ் மாணவர்களுக்கும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.

இருந்தபோதிலும் வடக்கிலுள்ள தமிழ் மக்கள் இன்னும் சிங்கள மக்களை ஆக்கிரமிப்பாளர்களாவே கருதுகின்றனர்.  நல்லிணக்க செயற்பாடுகளை மையப்படுத்தி பாரிய மாற்றங்களை நாம் ஏற்படுத்தியுள்ளோம். எனினும் இந்த சம்பவத்திற்கு தமிழ் அரசியல்வாதிகளே பொறுப்பு கூற வேண்டும் . இந்த விடயம் தொடர்பில் இதுவரைக்கும் தமிழ் அரசியல் வாதிகள் மௌனிகளாகவே உள்ளனர் .இவர்களது  மெளனம் எமக்கு சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது .சிங்களவர்களாகிய நாம் மாறிவிட்டோம் . ஆனால் தமிழ் தலைமைகளும் பல்கலைகழகமும் இன்னும் மாறாதது போன்றே தோன்றுகின்றது .  வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் என்ன பதலளிக்க போகின்றார்கள் என்பதனை நாம் அவதானித்து கொண்டுள்ளோம். அவர்களது அறிவிப்பிலேயே   எதிர்கால நடவடிக்கைகள் தங்கியுள்ளதுடன் அவர்களது யதார்த்தமான கொள்கைகளும் வெ ளிவரும். .  இவ்வாறான நிலைமை தொடர்ந்து கொண்டே இருக்குமேயானால் இன நல்லிணக்கம் என்பது கேள்விகுறியாக மாறிவிடும்.

எனவே இந்த சம்பவம் பிராபகரனின்  நோக்கங்களை பிரதிபலிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது . எனினும் இதனை நல்லிணக்கம் ,சமாதானம் என்ற போர்வையில் மூடிமறைப்பதற்கு இடமளிக்க முடியாது . குற்றம் இழைக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தண்டிக்கப்படல் வேண்டும். இதனை இராணுவத்தின் மீது சுமத்துவதற்கு புலம்பெயர்ந்த அமைப்பினர்களும் தமிழ் தலைமைகளும் முயற்சித்து வருகின்றனர். இனவாதம் தூண்டப்படும் என்பதனை கொண்டு இச்சம்பவத்தை மூடிமறைக்க பார்க்கின்றனர். அதற்கு நாம் இடமளிக்க போவதில்லை. இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இனவாதிகளுக்கு பெரும் அதிஷ்டமாக மாறிவிடும். இந்த சம்பவத்தை மூடிமறைத்தால் இன ரீதியான பிரச்சினை என்றுமே தீராது. நாகதீவு புத்தர் சிலை விவகாரத்திலும் இவ்வாறான நிலைமையே காணக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் இனவாத பிரவேசத்திற்கு நாம் இடமளிக்க கூடாது. அதேபோன்று இந்த சம்பவத்தை அடிப்படையாக தெற்கு இனவாத தூண்டுதல் செயற்பாடுகளுக்கும் இடமளிக்க கூடாது. தமிழ் அரசியல் தலைமைகள் சிலர் இன்னும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே கூறுகின்றனர். சிங்களவர்களாகிய நாம் மாறிவிட்டோம். இனிமேல் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் தலைமைகளும் பல்கலைகழக மாணவர்களுமே மாறவேண்டும். பயங்கரவாதத்திலிருந்து யாழ்ப்பாணத்தை மீட்டாலும் பயங்கரவாத சிந்தனைகளை எம்மால் மாற்ற முடியாதுள்ளது என்றார்.

இதன்போது அக்கட்சி பிரதி செயலாளர்  பேராசிரியர் அநுருத்த பிரதீப் குறிப்பிடுகையில்,

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் சிங்கள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு எம்மால் ஒன்றும் செய்யமுடியாது. அது சாதாரண விடயமாகும். கொழும்பு மற்றும் பேராதெனிய பல்கலைகழகங்களின் நிலைமை இவ்வாறுதான் உள்ளது. ஆங்கில மொழிமூலம் கல்வி கற்ககூடிய சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தமாகும். அதனை எம்மால் மாற்றியமைக்க முடியாது. இதுதான் பல்கலைகழக நியதியாகும். அதனை எம்மால் மாற்றமுடியாது. இதனை அடிப்படையாக கொண்டு நாம் யாழ்ப்பாண பல்கலைகழகத்தை ஆக்கிரமிப்பதாக கூறுவது எவ்வாறு நியாயமாகும் என்றார்.