தமிழகத்தில் மினி பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை

118 0

தமிழகத்தில் மினி பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 1997-ம் ஆண்டு கிராமப்புறங்களுக்கு பேருந்து சேவைவழங்கும் வகையில் மினி பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த மினி பேருந்துகள், 16 கி.மீ.வரை சேவையில்லாத வழித்தடத்திலும், 4 கி.மீ. முக்கிய சாலைகளில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது 4,092 மினிபேருந்துகள் உள்ள நிலையில், அவற்றின் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை.

எனவே, கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும், முக்கிய சாலைகளில் மேலும் சிறிது தூரம் வரை செல்ல மினி பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் எனவும் அவற்றின் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

அதேநேரம், முக்கிய சாலைகளில் மினி பேருந்துகளின் தூரத்தை அதிகப்படுத்தினால், தனியார் பேருந்துகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என அவற்றின் உரிமையாளர்களும் தெரிவித்து வந்தனர்.

இவற்றை கருத்தில்கொண்டு போக்குவரத்துத் துறை சார்பில்மினி பேருந்து திட்டம் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. இதில்மினி பேருந்துகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதோடு, கிராமங்களில் அதிக தூரம் செல்லும் பேருந்துகளுக்கு ஊக்கத் தொகை, மினி பேருந்துகளை மேலும் சிறிது தூரம் செல்ல அனுமதிப்பது எனதீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்குப் பிறகு திட்டம் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.