தேர்தலை நடத்துவதா இல்லையா? அதற்கு நிதியை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது.
தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்காக அவர் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்தில் நிச்சயம் பொறுப்பு கூற வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
அதே போன்று விரைவில் மீண்டுமொரு புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை போன்றே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்தும் ஆட்சி கைப்பற்றப்படும் என்றும் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஜனநாயகத்தை பாதுகாப்பதாகக் கூறி ஆட்சியைப் பொறுப்பேற்ற ஜனாதிபதியினாலேயே அதனை மீறுவதற்கும் இடமளிக்க முடியாது.
மீண்டுமொரு புரட்சி ஏற்பட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைப் போன்றே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் துரத்தியடிக்கப்படுவார்.
ஆர்ப்பாட்டங்களை அவர் பொலிஸாரைக் கொண்டு முடக்க எண்ணினால் மாவட்டம் , கிராமம் என நாடளாவிய ரீதியில் அவற்றை விஸ்தரிப்போம். தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை ஜனாதிபதிக்கு தீர்மானிக்க முடியாது. அதற்கான உரிமை அவருக்கு கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி விலகிய பின்னர் நீதிமன்றத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவில் கொள்ள வேண்டும்.
மக்கள் ஆணைக்குழு முரணாக தற்போது அவரால் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் பதவி விலகிய பின்னர் நிச்சயம் நீதிமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும்.
விரைவில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
காரணம் அவர் இன்னும் பல வருடங்களுக்கு ஆட்சியிலிருக்கப் போவதில்லை. நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அவர் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு இவ்விடயங்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

