பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள்

119 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மறு தினமான (21.02.2023), செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது.

கோண்டாவில் வடக்கிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது பூதவுடல், நாளை மறுதினம் (21.02.2023) காலை 7:30 மணிக்கு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்குப் பூதவுடல் மீண்டும் அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு முற்பகல் 10:30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்ட பின்னர் தகனக் கிரியைகளுக்காக இனுவில் கிழக்கு, காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தராகக் கடமையாற்றிய காலத்தில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் ‘தமிழமுதம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்காகவும், பல்கலைக்கழகத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்படுவதைத் தடுக்கத் தவறியமை தொடர்பிலும் இராணுவப் புலனாய்வு பிரிவினரின் அறிக்கையின் பேரில் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தினுள் மாவீரர் தினம், தியாகி திலீபன், அன்னை பூபதி, பொன். சிவகுமாரன் முதலானோரின் நினைவுத் தினங்கள் அனுஷ்டிக்கப்படுவது வழமையாகும். அத்தகைய நிகழ்வுகள் அனைத்திலும் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பதவியில் இருக்கும்போது பங்குபற்றிய ஒரே ஒரு துணைவேந்தர் என்று மாணவர்களால் மதிக்கப்பட்டவர் பேராசிரியர் விக்னேஸ்வரன்.

சகலரும் அஞ்சும் பொங்கு தமிழ் பிரகடனத் தூபியை மீளமைக்க மாணவர்களால் எடுக்கப்பட்ட முயற்சிக்குத் தடை ஏற்படுத்தாது, தமிழமுத விழா தினத்தில் தானே அதனைத் திறந்தும் வைத்தார். பல்கலைக் கழகத்தினுள் இருக்கும் மாவீரர் தூபியும் இவரது காலத்தில் புனரமைப்புச் செய்யப்பட்டது.

துணைவேந்தர் அலுவலகத்திற்குப் பின் புறமாக அமைக்கப்பட்டு, பின்னர் உடைத்து, திருப்பிக் கட்டப்பட்ட முள்ளிவாய்கால் தூபி பல்கலைக்கழகத்தின் மத்தியில் உள்ள வேறொரு இடத்தில் அத்திவாரம் வெட்டி ஆரம்பிக்கப்பட்டது.

எனினும். அவ்விடத்தில் கட்டுவதற்குப் பல்கலைக்கழகத்தின் அடுத்த மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில் எதிர்ப்பு வந்ததனால், தற்போது தூபி உள்ள இடத்தில் கட்டுவதற்குத் துணைவேந்தரின் உளரீதியான ஆதரவு இருந்தமையே தமது வெற்றிக்குக் காரணம் என்று அன்றைய காலத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பொறுப்பு வாய்ந்த பதவியிலிருந்த முன்னாள் மாணவன் ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பிலான பதிவில் அவர் மேலும் குறிப்பிடுகையில், மீண்டும் புதிய இடத்தில் முள்ளி வாய்க்கால் நினைவுத்தூபிக்கு அத்திவாரம் வெட்டிக் கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது அன்றைய உயர் கல்வி அமைச்சரும், இன்றைய நீதி அமைச்சருமான வியஜதாச ராஜபக்சவிடமிருந்து இருந்து காட்டமான கடிதம் துணைவேந்தருக்கு வந்தது.

உடனடியாக அந்தத் தூபியின் கட்டுமானத்தை நிறுத்தும்படி. நாமும் சூழ்நிலையைப் புரிந்து நிதானமாகச் செயற்பட்டதால் அன்று அதனை அமைதியாக விட்டோம் பின்னர் படிப்படியாகச் சில வேலைகளைச் செய்து முழுமையாக்க முன் இடிக்கப்பட்டது.

இடிக்கப்பட்டதாலேயே அது இன்று பிரமாண்டமாகக் கட்டப்பட்டது. அதிகாரத்தில் உள்ளவர் ஒரு தமிழ்த்தேசிய வாதியாக இருக்கும்போது எமது சிந்தனைகளைச் செயல்படுத்துவது இலகுவானது. இடை நடுவில் துணைவேந்தர் பதவிக்காலம் முடிய முன்னர் பதவி பறிக்கப்பட்ட பின் அவரைக் கௌரவிக்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அடுத்த தமிழமுதத்தின் பிரதம விருந்தினராக அழைத்துக் கௌரவித்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.